Wednesday, August 28, 2013

என் பலம் எனக்குத் தெரியும்!”

உலக பேட்மிட்டன் அரங்கில், 'இந்தியாவின் இன்னோர் இளம் புயல்’ பி.வி.சிந்து! சீனா, தாய்லாந்து, மலேசிய வீரர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த பேட்மிட்டன் கோட்டையில், ஊடுருவியவர் சாய்னா. அந்த சாய்னாவே எட்டிப்பிடிக்காத சாதனையாக உலக பேட் மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார் சிந்து. முன்னாள் கூடைப் பந்தாட்ட வீரர்களான ரமணா - விஜயா ஆகியோரின் இரண்டாவது மகள், சிந்து. விஜயா, தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர். ரயில்வே வேலைக்காக ஹைதராபாத்துக்கு இடம் மாறியவர். ''ஐந்து வயதில் அப்பாவுடன் வாலிபால் மைதானத்துக்குச் செல்லும்போது அருகில் இருந்த பேட்மிட்டன் அரங்கில் விளையாட ஆர்வம் காட்டிய சிந்துவை, பேட்மிட்டன் பயிற்சியில் சேர்த்தார் ரமணா. அதன் பிறகு, இந்தியாவின் முன்னணி பேட்மிட்டன் பயிற்சியாளரான கோபிசந்தின் அகாடமியில் ஆறு வருடங்களாகப் பயிற்சி பெற்றுவருகிறார்!'' என்று கூறும் விஜயாவின் குரலில் அத்தனை பூரிப்பு. ''நான், சர்வதேச அளவில் விளையாடுவேன் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. என் கனவை நிறைவேற்றிய என் பயிற்சியாளர் கோபிசந்த் சாருக்குத்தான் இந்த வெற்றிக்கான பெருமை எல்லாம் சேரும்!'' என்கிறார் சிந்து அடக்கமாக. நான் தினமும் நான்கு செஷன்களாக பயிற்சி எடுப்பேன். காலை 4.30 முதல் 6 மணி வரை, பிறகு 7 மணி முதல் 8.30 மணி வரை, மீண்டும் 11.30 மணி முதல் 12.30 வரை. பிறகு, கொஞ்சம் ஓய்வு. மீண்டும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை. ஒருநாள்கூட பயிற்சி தவறாது. பந்தயங்களின்போது கடைசிப் புள்ளி வரை சோர்வடையாமல் விளையாடுவதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படும். அதனால் ஸ்டாமினாவை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான் 5 அடி 10 அங்குல உயரம் இருப்பது, கடவுள் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வரம். பேட்மிட்டன் வீரர்கள், பொதுவாக இந்த அளவு உயரமாக இருக்க மாட்டார்கள். இந்த உயரத்தால் ஸ்மாஷ் ஷாட்டுகளை என்னால் மிகவும் எளிதாக அடிக்க முடிகிறது!'' என்று சொல்லும் சிந்து, ஹைதராபாத் செயின்ட் ஆன்ஸ் கல்லூரியின் (பி.காம்.,) முதலாம் ஆண்டு மாணவி. 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் பேட்மிட்டன் தரவரிசைப் பட்டியலில் 204-வது இடத்தில் இருந்தவர், இரண்டே ஆண்டுகளில் 12-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற மலேசிய ஓப்பன் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவருமான சீனாவின் லீ ஸ¨ராயைத் தோற்கடித்து சர்வதேச கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தவர், தற்போதைய உலக பேட்மிட்டன் தொடரில் முன்னாள் சாம்பி யன்களான சீனாவின் யிஹான் வாங் மற்றும் ஷிஸியான் வாங்கைத் தோற்கடித்து அசத்தியிருக்கிறார். ''உலகின் டாப் வீராங்கனைகளைத் தோற்கடித்து இருக்கிறீர்கள். இனி, உங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் ஏகப பட்ட எதிர்பார்ப்பைச் சுமக்க வேண்டிஇருக்குமே?'' ''இதை 'பிரஷர்’ என எடுத்துக்கொள்ள மாட்டேன். இதற்கு முன் பார்க்காத பலர், என் ஆட் டத்தைப் பார்க்கிறார்கள்; உற்சாகப்படுத்துகிறார்கள் என்று பாசிட்டிவாக எடுத்துக்கொள்வேன். சர்வதேச வீரர் - வீராங்கனைகளுக்கான முதல் தகுதியே பிரஷரை சமாளிப்பதுதான். அந்தப் பக்குவம் எனக்கு இருக்கிறது என நம்புகிறேன். ஏனென்றால், கோபிசந்த் சார் பயிற்சியின் தொடக்கப் பாடமே, 'உனது ஆட்டத்தில் கவனம் செலுத்து’ என்பதுதான்! எதிராளியின் பலம் என்ன, பலவீனம் என்ன என் பதை யோசித்துக் குழப்பிக்கொள் ளாமல், என் பலத்தை வைத்து எப்படி ஸ்கோர் செய்வது என்று தான் யோசிப்பேன்!'' ''உங்களின் ரோல் மாடல்?'' ''உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இப்போது சாம்பியன் பட்டம் வென்ற சீனாவின் லின் டான்தான். உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளாமல் விவேகமாக விளையாடுவார்!'' 2016-ம் ஆண்டின் பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளின்போது தங்க வேட்டையில் சாய்னா வுக்கு தோள்கொடுக்கவிருக்கிறார் சிந்து. கலக்குங்க சிஸ்டர்ஸ்!

No comments: