Monday, November 21, 2011

அபசகுன அரண்மனை?


பிரித்தானிய அரச குடும்பத்தின் அரண்மனைகளில் ஒன்றாக விளங்கும் கென்சிங்டன் அரண்மனை பற்றிய பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் தம்பதியர் தங்கள் இல்லற வாழ்க்கையை இந்த அரண்மனையிலேயே தொடங்கவுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்னர் அங்கு குடியிருந்த அரச குடும்பங்களுக்கு நேர்ந்த கதி பற்றிய வரலாற்று ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
மரண வேதனையால் துடித்துக் கொண்டிருந்த கரோலின் மகாராணி ஒருசில நாட்களின் பின்னர் இரத்தம் நச்சுத்தன்மை அடைந்த நிலையில் கொடூரமான முறையில் மரணத்தை தழுவிக் கொண்டார். அவர் எட்டாவது தடவையாக கர்ப்பமடைந்ததன் விளைவாக அவர் தொப்பிள்கொடி குடலிறக்க நோயால் அவஸ்தைப்பட்டு வந்தார். அவரைச் சுற்றி மருத்துவர் படையொன்று நின்றிருந்த போதிலும் கூட அரச குடும்ப கௌரவத்திற்குப் பங்கம் விளைவிக்கும் என்பதனால் அவர்களால் மகாராணியைப் பரிசோதிக்க முடியாமலிருந்தது. இறுதியாக அவர்கள் மகாராணியின் வயிற்றுப் பகுதி ஊடாக குடலின் ஒரு பகுதியை முன்னுக்கு நகர்த்துவதற்கு உறுதிபூண்டனர். ஆயினும், குடற் பகுதியை பின்னுக்குத் தள்ளுவதிலும் பார்க்க அதனைத் துண்டித்து விடுவதென்ற அவரின் தலைவிதியை நிர்ணயிக்கும் தீர்மானத்திற்கு வந்தனர். அது நடந்து எட்டு நாட்களின் பின்னர் இரண்டாம் ஜோர்ஜ் மன்னரின் அன்பு மனைவி கரோலின் மகாராணி தனது இறுதி மூச்சை விட்டார். இந்த பயங்கரம் நிறைந்த மரணப்படுக்கை காட்சி கடந்த 1737 ஆம் வருடம் அரங்கேறியது. ஆயினும் முன்பொருகாலத்தில் கென்சிங்டன் அரண்மனையின் அழகுராணியாக விளங்கிய கரோலின் மட்டுமல்ல, அந்த அரண்மனையின் 320 வருடகால வரலாற்றில் அதன் சுவர்கள், முற்றங்கள், அறைகளுக்குச் செல்லும் நடைபாதைகள் ஆகியனவும் இத்தகைய சோகமயத்திற்குள்ளானவையே.
வரலாற்றுப் புகழ்மிக்க அரச குடும்ப அரண்மனைகளில் பணியாற்றி வரும் மேற்பார்வை அதிகாரி லூசி வேர்சி இதுபற்றி குறிப்பிடுகையில்,
கென்சிங்டன் மாளிகையில் குடியிருந்துள்ளோரில் ஆகக் குறைந்தது ஏழு இளவரசிகள் சோக வாழ்வு வாழ்ந்ததாகவும் அல்லது வைத்திய நிலைக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பேரழிவுகள் மூலம் இந்த அரண்மனை சபிக்கப்பட்டதொன்றாக விளங்குவதுடன், கெடுதி செய்யும் ஆவி ஒன்று கூட இங்கிருக்கலாமெனவும் அஞ்சப்படுகின்றது.
கடந்த 97 இல் இளவரசி டயானா துர்மரணத்தைத் தழுவிய பின்னர், கென்சிங்டன் அரண்மனையின் வாயிற் கதவுகளுக்கு வெளியே எட்டிப் பார்த்தபடி காட்சியளிக்கும் கடலலை போன்ற பூங்கொத்துக்களை இன்றைய நாட்களில் கண்டுவியப்போர் அதன் கம்பீரமான முகப்புத் தோற்றத்தில் மயங்கி விடுகின்றனர்.
ஆயினும், இத்தகைய சிறப்பு அம்சங்களுக்குப் பின்னால், இளவரசர் வில்லியத்தின் தாயாரான மறைந்த இளவரசி டயானாவுக்கோ திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. அத்துடன் அவரும் சீமாட்டி கத்தரினும் குடியேறவென திருத்தம் செய்யப்பட்டு வரும் 21 அறைகள் கொண்ட அந்த மூன்றடுக்கு மாளிகையில் முன்னர் வசித்திருந்த அவரது பேர்த்தியான இளவரசி மார்க்ரட்டும் அனுகூலங்களும், இடைஞ்சல்களும் நிறைந்த தனது வாழ்க்கைப் பாதையை இங்குதான் கழித்திருந்தார். அறுபதுகளில் கவர்ச்சி மங்கையெனப் புகழப்பட்ட இளவரசி மார்கரெட்டும் புகைப்படக் கலைஞரான அவரது கணவர் ஸ்ணேடன் பிரபுவும் பாலே நடனக் கலைஞர் ருடோல்ப் நுரெயெவ் உள்ளிட்ட தங்கள் நண்பர்களையெல்லாம் அழைத்து விருந்து வைத்து மகிழ்ந்ததும் இந்த அரண்மனையில்தான். அவர்களிருவரினதும் விவாகரத்திற்குப் பின்னர், இளவரசி மார்கட் அதே அறைகளில் பிரபல நடிகர் பீட்டர் செல்லேர்ஸ் மற்றும் அவரின் விளையாட்டுப் பையன் றொடி லெவெனின் ஆகியோருடன் அவர் தனித்திருந்ததாக அவருக்கு அபகீர்த்தி உண்டாக்கும் புரளி கிளப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இத்தகைய அவமானகரமான சம்பவங்கள் குடியிருந்த அரண்மனையாகவும் இது இருந்துள்ளது.
கடந்த 1690 களில் கென்சிங்டன் அரண்மனை ஒரு கிராமிய ஏகாந்த இடமாக அதன் சுத்தமான காற்றோட்ட வசதி காரணமாக அனைவராலும் கருதப்பட்டிருந்தது. 1690 இல் மூன்றாம் வில்லியமும் மகாராணி மேரியும் பாரம்பரியமாக அரச பரம்பரையினர் வசித்து வந்த வெள்ளை மண்டப அரண்மனையை விட்டு தாங்கள் கென்சிங்டனில் வாங்கியிருந்த வீட்டை சென். போல் தேவாலயத்தின் கட்டிடக் கலைஞரான சேர் கிறிஸ்தோபர் ரென்னின் உதவியுடன் மீள் வடிவமைத்து அங்கேயே குடியிருந்தனர். ஒரு வார காலத்திற்குள்ளேயே மகாராணி மேரி தனது 32 ஆவது வயதில் பெரிய அம்மைநோயால் பீடிக்கப்பட்ட நிலையில் இறந்து போனார்.
மூன்றாம் வில்லியமும் அவரது கணவர் ஜின்ஸ் அரண்மனையில் கடந்த 1702 இல் காலமானார். அதனைத் தொடர்ந்து, கென்சிங்டன் அரண்மனையுடன் தொடர்புடைய மறைந்த இளவரசி மார்கிரட்டின் சகோதரியான ஆன் டென்மார்க் இளவரசர் ஜோர்ஜ் உடனான திருமண பந்தத்தின் மூலம் 17 தடவைகள் கர்ப்பம் தரித்து, முடிக்குரிய வாரிசொன்றைப் பெற்றுக் கொடுக்க முனைந்தார். ஆயினும் அவரது பிள்ளைகளில் எவருமே உரிய பராயத்தை அடையவில்லை. அவற்றுள் சில குறைப் பிரசவங்களாகவும், சில இறந்த நிலையில் பிறந்தனவாகவும் ஏனையவை பெரிய அம்மை நோயால் சிறுபராயத்தில் இறந்தும் விட்டிருந்தன.
நீண்டகாலம் வசித்து வரும் இளவரசர் வில்லியமும் தனது 14 ஆவது வயதில் மர்மமான நோயொன்றால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், அவரது தாயாரான இளவரசி டயானாவும் 14 ஆண்டுகள் கழிந்த நிலையில் மணமுடைந்து கணவர் இளவரசர் சாள்ஸைப் பிரிந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியுற்று பிரான்சில் கார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தமையும் கவனிக்கத்தக்கது.

மெட்ரோநியூஸ்

No comments: