Wednesday, February 25, 2009

கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி


விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் சிவராத்திரி அன்று முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் அப்பம் சுடும் திருவிழா நடைபெறும். கொதிக்கும் நெய்யில் கையை விட்டு மூதாட்டி ஒருவர் அப்பம் சுடுவது வழக்கம். இதைக் காண சிவகாசி, விருதுநகர், நெல்லை, மதுரை, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஏராளமான பெண்கள் குலவையிட அதே பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 75 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட தொடங்கினார். தொடர்ந்து 4 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து 20 கூடைகள் நிறைய அப்பம் சுட்டார்.
இது குறித்து முத்தம்மாள் கூறுகையில், 41வது ஆண்டாக இது போல் அப்பம் சுடுகிறேன். இதற்காக கடந்த 10 நாட்களாக கடும் விரதம் இருந்தேன் என்றார்.
மூதாட்டி சுட்ட அப்பம் அதிகாலை நடந்த பூஜையில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இது குறித்து பெண் பக்தர் ஒருவர் கூறுகையில், சமையல் செய்யும்போது எண்ணெய் தெறித்தாலே உடம்பு புண்ணாகிவிடும். ஆனால், மூதாட்டி நெய்க்குள் கையைவிட்டு அப்பம் சுடுவது ஆச்சர்யமாக உள்ளது. அப்பம் சுடுவது மட்டுமில்லாமல் கொதிக்கும் நெய்யை விபூதியைப் பூசுவதுபோல நெற்றியிலும், தனது இரு கைகளிலும் பூசுவது மெய்சிலிர்க்க வைக்கிறது’ என்றார்.

No comments: